“இந்தி தெரிந்ததால் ராஜஸ்தான் பெண்களிடம் பேஸ்புக்கில் பழகி ஏமாற்றினேன்”

இந்தி தெரிந்த சென்னையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பேஸ்புக் வாயிலாக ராஜஸ்தான் சேட்டு வீட்டு பெண்களிடம் தொழிலதிபர் போல் பழகி பல லட்சம் ஏமாற்றியுள்ளான்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் கடோலயா, (49) என்பவர் கீழ்ப்பாக்கம், பர்னபி சாலையில் வசிக்கிறார். இவர் வேப்பேரியைச் சேர்ந்த திலீப் (28) என்பவர் தன்னிடம் விலையுயர்ந்த செல்போன் இறக்குமதி தொழில் செய்வதாக கூறி ரூ.2.75 லட்சத்தை கடனாக பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டான் என போலீஸில் புகாரளித்தார். வேப்பேரி போலீசார் விசாரித்து, சூளையில் பதுங்கி இருந்த திலீப்பை நேற்று முன்தினம் கைது செய்தனர்
திலீப்பின் வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே தலைச்சுற்றி போனார்கள். திருமணமாகாத திலீப் பேஸ்புக்கில் பெண்களுடன் பேசுவதையே முழு நேராக தொழிலாக பார்த்து வந்துள்ளார். ஆனால் பெண்களிடமோ தன்னை தொழிலதிபர் போல காட்டிக்கொள்வார். இவருக்கு இந்தி தெரியும் என்பதால் சென்னையில் வசிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த சேட்டு வீட்டு பெண்களிடம் நல்லவன் போல பேசி குடும்ப விவரங்களை அறிந்து கொள்வான்.

பின்னர் அப்பெண்களின் கணவர், சகோதரர்களுடனும் நட்பை ஏற்படுத்திக் கொள்வது. அவர்களுக்கு நம்பிக்கை வந்ததும் ‘செல்போன் இறக்குமதி செய்துள்ளேன், சுங்கக் கட்டணத்திற்கு பணம் இல்லை, கடன் தந்தால் லாபத்தில் பங்கு தருகிறேன்’ என கூறி சில லட்சங்களை கறந்து விட்டு தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்துள்ளான்.
அதேபோல், விதவையரை குறிவைத்து, திருமண ஆசை காட்டி, உல்லாசம் அனுபவித்து, நகை, பணம் பறித்து வந்துள்ளான். சேத்துப்பட்டில் உள்ள, ராஜஸ்தானைச் சேர்ந்த கல்லுாரி மாணவியிடம், வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் பணம் பெற்றுள்ளான்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியிடம், சென்னையில், தனியார் விமான நிறுவனத்தில், வேலை வாங்கித் தருவதாக, 2.50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளான்.

ராயப்பேட்டையில் வசிக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டில், நண்பர் போல் பழகி 30 சவரன் நகை திருடியுள்ளான். விமான நிறுவன ஊழியராக வேண்டும் என தி.நகரில் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்தவன், அங்குள்ள மாணவ மாணவிகளிடம் பழகி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் வரை ஏமாற்றியுள்ளான்.
இவ்வாறு இவனது மோசடி பட்டியல் ரொம்ப லென்த்தாக போனதை கேட்டு போலீசாருக்கே தலை சுற்றியுள்ளது. பலர் புகாரளிக்காததால் இத்தனை நாள் ஏமாற்றிய பணத்தில் சொகுசாக வாழ்ந்துள்ளான்.