மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மனு

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை, இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம், மத்திய – மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டே ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.