துபாயில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஏர் இந்திய விமானம் விபத்து…
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் I.X.-1344 விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.
கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த அருகில் வசித்து வந்த கிராமத்தினர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் அரசு தரப்பில் மீட்பு படையினர் விரைந்து சென்று விமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விமானத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் இதில் விமானி உள்பட 17 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர்.
இதற்கிடையில், இந்த விபத்தில் விமானத்தில் உயிரிழந்த 17 பேர் தவிர எஞ்சிய 173 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.