விமான விபத்து: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
கேரள மாநிலம் கோழிக்கோடு விமானம் விபத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து, கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம், எதிர்பாராத விதமாக, ரன்வேயில் மோதி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்திற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கோழிக்கோடில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான துயர சம்பவம் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், இதுவொரு அதிர்ச்சி சம்பவம் என்றும் தெரிவித்துள்ளார்.