குஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் நிகழ்ந்த சோகம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. போதுமான படுக்கை வசதி இல்லாத காரணத்தால், நோயாளிகள் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டலில், இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதால் நோயாளிகள் செய்வது அறியாது திகைத்தனர். அப்போது சிலர் மேல்தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு குதித்ததாகத் தெரிகிறது.

இந்த தீ விபத்தில் முதற்கட்டமாக இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.