‘முதல்வரை 10 நாட்களாக காணவில்லை.. மர்மம் என்ன? ’ஐகோர்ட்டில் வழக்கு

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 10 நாட்களாக எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் உள்ளது. இங்கு சந்திரசேகர ராவ் 10 நாட்களாக ஐதராபாத்தில் இல்லை என கூறி அரசியல் ஆர்வலர் நவீன் குமார் மாநில உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: “முதல்வர் 25ம் தேதி 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மரம் வளர்க்கும் திட்ட நிகழ்ச்சி மற்றும் 28ல் நடைபெற்ற முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் பிறந்தநாள் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் முக கவசம் அணியாமல் பங்கேற்றார்.
அதன்பிறகு 10 நாட்களாக முதல்வர் குறித்த எவ்வித தகவலும் இல்லை. பொது நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அவரது நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
முதல்வரின் அரசு இல்லத்தில் 30க்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல்வரின் உடல்நிலை குறித்த கவலை ஏற்பட்டுள்ளது. அவர் எங்கு என்ன நிலையில் இருக்கிறார் என அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனவே தற்போது முதல்வர் இருக்குமிடம் அவரது உடல்நிலை குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாநில நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.