“வேளாண் சட்டங்களால் விவசாயிகள் எந்த நிலையிலும் நஷ்டம் அடைய மாட்டார்கள்!” தமிழக முதல்வர் உறுதி!

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றும், அதனை விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை கூறி, எதிர்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா தவிர 2 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும். ஒப்பந்தத்தில் உள்ளபடியே விவசாயிகளுக்கு விலை கிடைக்கும்.
நான் விவசாயி என்பதால், வேளாண் மசோதா குறித்து நன்கு அறிவேன். வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் எந்த நிலையிலும் நஷ்டம் அடைய மாட்டார்கள். விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொள்வது கட்டாயமல்ல. விவசாயிகள் எந்த வகையிலும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ஒட்டியே இந்த சட்டமும் உள்ளது. தமிழக மக்கள், விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டங்கள் வந்தாலும் எதிர்ப்போம். வேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.