“மத்திய அரசு சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்!” ஜி.கே.வாசன் கோரிக்கை!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வருகிற செப்டம்பர் மாதம் முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கொரோனா காலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து முடக்கப்பட்டு, மருத்துவக் காரணங்களுக்காகவும், திருமணம் மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பு ஆகிய காரணங்களுக்காகவும் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கினால் வேலையின்மையும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டு மக்கள் அவதியுறும் நிலையில் நெடுஞ்சாலைத் துறை சுங்கக் கட்டணத்தை உயர்த்தினால் சரக்கு வாகனங்களின் கட்டணம் உயரும். அதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். இதனால், மேலும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

ஏற்கெனவே தினமும் ஏறுமுகத்தில் இருக்கும் பெட்ரோல் விலையேற்றத்தினால் அத்தியாவசியப் பொருள்கள் விலையேறி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுமக்களின் நலன் கருதி, சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தக் கூடாது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளித்து, அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்”. இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x