முன் விரோதம் காரணமாக இந்து முன்னணி இளைஞர் வெட்டிக்கொலை

ராமநாதபுரத்தில் இரு தரப்பினரிடையேயான முன் விரோதம் காரணமாக இந்து முன்னணியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சாமிநாதனின் மகன் அருண் பிரகாஷ் (22), மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி நகர பொறுப்பாளராக இருந்துள்ளார். தற்போது இந்து முன்னணி கமிட்டி பொறுப்பாளராக உள்ளார். இவர் சம்பவத்தன்று கள்ளர்தெரு ஏ.டி.எம்.அருகில் தனது நண்பரான ஆட்டோ ஓட்டுனர் யோகேஸ்வரனுடன் (23) பேசிக்கொண்டு இருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் திடீரென இரண்டு பேரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.
படுகாயம் அடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அருண்பிரகாஷ் உயிரிழந்தார். யோகேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கேணிக்கரை காவல் ஆய்வாளர் பிரபு விசாரணை நடத்தி சரவணன், சபீக் லெப்ட் ஷேக் உள்ளிட்ட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருண் பிரகாஷிற்கு சரவணன் மற்றும் சபீக் என்பவருடன் தகராறு இருந்துள்ளது. அவர்களை அருண் பிரகாஷ் சில நாட்களுக்கு முன் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்துக்கு பின்னால் விநாயகர் சதுர்த்தி வசூல் விவகாரமும் உள்ளதாக கூறப்படுகிறது.