“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” – ராகுல் காந்தி உறுதி

அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிவசாகர் என்ற இடத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்-ம் அசாமை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. இதனால் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் பாதிக்கப்பட மாட்டார்கள் – மாறாக, அசாமும் இந்தியாவின் பிற பகுதிகளும் பாதிக்கப்படும்.
அசாம் மக்களை ஒருங்கிணைத்தது காங்கிரஸ்தான். முன்பெல்லாம் வன்முறை காரணமாக பொதுக்கூட்டங்களிலிருந்து ஒருவர் வீடு திரும்ப முடியுமா? என்கிற உறுதியான சூழல் இருந்ததில்லை. தானும் காங்கிரஸ் தொண்டர்களும் அசாம் ஒப்பந்த உடன்பாட்டை பாதுகாப்போம். ஒரு அங்குலம் கூட அதிலிருந்து விலக மாட்டோம்.
கொரோனா காலத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து அவரது நண்பர்கள் இருவரின் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டார். அசாமில் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம்’’ என்றார்.