மல்லையாவின் வங்கி கணக்குகள் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு உதவி செய்ய கோரி அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம்..

‘தொழிலதிபர் விஜய் மல்லையாவின் வங்கி கணக்குகள் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு உதவி செய்ய கோரி அமெரிக்காவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.
‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனர் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய 9000 கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல் தப்பியோடி ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கியுள்ளார். அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்லையா மீதான கடன் மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை மஹாராஷ்டிர மாநிலம் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: மல்லையா இந்தியாவில் கிங் பிஷர் நிறுவனம் பெயரில் வங்கிகளில் கடனாக வாங்கிய பணத்தை வெளிநாடுகளில் உள்ள தன் வேறு நிறுவன வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். அமெரிக்காவில் உள்ள வங்கிகளிலும் பணத்தை மாற்றியுள்ளார். இந்தியாவில் மல்லையாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதனால் அமெரிக்காவில் உள்ள வங்கி கணக்குகளில் மல்லையா பணம் பரிமாற்றம் செய்வது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் சில ஆவணங்களை பெற வேண்டியுள்ளது. இதற்கும் இப்போது கிடைத்துள்ள ஆவணங்களை பயன்படுத்துவதற்கும் அமெரிக்க அட்டர்னி ஜெனரலின் அனுமதியை பெற வேண்டும். அதனால் இது தொடர்பாக எங்களுக்கு உதவி செய்ய அமெரிக்க நீதித்துறைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம். கோரிக்கை கடிதம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜக்தாலே முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ.யின் கோரிக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி ‘மல்லையா மற்றும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்பான வங்கி கணக்குகளை விசாரிக்கவும் தேவையான ஆவணங்களை வழங்கவும் அனுமதி வழங்க வேண்டும்’ என கோரி அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார்.