ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கிய விரைவு போக்குவரத்து கழகம்

வெளி மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.
தமிழகத்தில், கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, வரும் 7-ம் தேதி முதல் மாவட்டங்கள் இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், வெளி மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால், இரவு நேரங்களில் பேருந்துகளை கவனமாக, ஓட்டுனர்கள் இயக்க வேண்டும். நள்ளிரவு முதல் காலை 4 மணி வரை நடத்துனர்கள் இருக்கையில் அமர்ந்து, ஓட்டுனர்கள் உறங்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
வழித்தடங்களில் இருசக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் கவனமாக பணிபுரிய வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை இருப்பதால் ஓட்டுனர்கள் கவனமுடன் பேருந்துகளை இயக்க வேண்டும்.
இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.