இறுதியாண்டு தேர்வை நடத்தியே தீர்வோம்: யு.ஜி.சி., திட்டவட்டம்

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என, பல்கலைக்கழக மானியக்குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்ற பல்கலைக்கழக மானியக்குழுவின் உத்தரவை எதிர்த்து, மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள், இந்த தேர்வுகளை ரத்து செய்வதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யு.ஜி.சி. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கல்லூரி இறுதித் தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை எனவும், மாணவர்களுக்கு பட்டம் வழங்குவது தொடர்பான விதிகளை, பல்கலைக்கழக மானியக்குழு மட்டுமே பரிந்துரைக்க முடியுமெனவும் வாதாடினார்.
கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக, டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளன. இதற்கு பதிலளிக்க யுஜிசி சார்பில், அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.