“தமிழ்நாட்டில் அமித்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள்” கே.எஸ்.அழகிரி பேட்டி!!

தமிழகத்தில் அமித்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 21ம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார். 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
“அமித்ஷாவின் வருகை தமிழகத்தில் பலருக்கு அச்சத்தைக் கொடுக்கும்” என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், “தமிழகத்தில் அமித்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கற்பனையில் வாழ்கிறார். நிஜ உலகிற்கு வர சொல்ல வேண்டும். ஜனநாயக நாட்டில் யாரை பார்த்தும் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என கே.எஸ்.அழகிரி சாடினார்.