அடி மேல் அடி! ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த பென்சில்வேனியா நீதிபதி!!
பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்ப் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை அம்மாகாண நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. இதில், 306 எலக்டோரல் ஓட்டுகளை பெற்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் வெற்றி பெற்றுள்ளார். பென்சில்வேனியா, ஜார்ஜியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களை அவர் கைப்பற்றி உள்ளார். அவரது வெற்றியை உலகமே அங்கீகரித்தாலும், அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.
பல மாகாணங்களிலும் தேர்தல் முடிவை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்ப் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிபதி மாத்யூ பர்ன் நேற்று தள்ளுபடி செய்தார். தேர்தலில் முறைகேடு என்ற வாதத்திற்கு வலு சேர்க்க டிரம்ப் தரப்பினர் தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இது டிரம்ப் தரப்பினருக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பிடன் வென்றுள்ளார். இதே போல மிச்சிகன் மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென்ற டிரம்ப் தரப்பின் கோரிக்கையை ஏற்க அம்மாகாண அரசு மறுத்து விட்டது. எனவே பென்சில்வேனியா மற்றும் மிச்சிகனில் அடுத்த வாரம் பிடெனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
ஜார்ஜியா மாகாணத்தில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டதில் முறைகேடு இருப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் பிடென் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தபால் ஓட்டுகள் மறுஎண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. 5 லட்சம் வாக்குகள் கைகளால் எண்ணப்பட்டன. இதிலும் பிடன் 20,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.