“நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்படும்” அமைச்சர் தங்கமணி தகவல்!!

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நிவர் புயல் கரையைக் கடக்கும்போது, முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்படும். புயல் கரையைக் கடந்தபிறகு, சேதாரம் இருந்தால், அது உடனடியாக சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும். சேதாரம் இல்லையென்றால் சோதனை செய்துவிட்டு உடனடியாக மின்சாரம் வழங்கப்படும். மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.
புயல் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளோம். எந்தப் பகுதிகளிலெல்லாம் மின்சாரக் கம்பிகள் தாழ்வாக செல்கிறதோ நாளைக்குள் உடனடியாக சரிசெய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். ஏற்கெனவே, கஜா புயல் பாதிப்பின்போது 3,30,000 மின்கம்பங்கள் புதிதாக போடப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிகமாக மழை இருக்கின்ற பகுதி. வடிகால் பகுதியாக இருக்கின்ற காரணத்தால் உலக வங்கி உதவியோடு புதைவடைத் தடம் பணி நடைபெற்று வருகிறது. முழுமையாக முடிந்த பிறகு கடலூரில் பாதிப்பு இருக்காது. சென்னையைப் பொறுத்தவரை 75 சதவீதம் புதைவடக் கம்பியாக இருக்கிறது. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யப்படும். கடலூரில்தான் அதிகமாக மழைவரும். எனவே, அங்கே சிறப்பு கவனம் செலுத்துகிறோம். தற்போதைக்கு 100 கி.மீ வேகத்தில் புயல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு வேகமாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
புயல் எந்த திசைக்கு மாறினாலும் அதனை எதிர்கொள்ள முழுமையாக தயாராக உள்ளோம். எந்தப் பகுதியில் புயல் கரையைக் கடக்கிறதோ அந்தப் பகுதியில் மின்சாரத்தை துண்டிப்போம். இந்த ஆண்டில் மட்டும் 60,000 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. 1912 என்ற எண்ணில் மின்சாரத்துறை தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்தார்.