“எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்” வேல்முருகன் கோரிக்கை!!

“7.5 இட ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியிட்டது போன்று, எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்” என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, “ஓட்டுக்காக பாமக தலைவர் ராமதாஸ் தற்போது வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பேசி வருகிறார். தேர்தல் வரும்போது தான் வன்னிய இன மக்கள் மீது அவருக்கு அக்கறை வரும். மற்ற நேரங்களில் அவர் மறந்துவிடுவார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள பகுதியில், மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. எனவே, 7.5 இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது போன்றே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்தும் அரசாணை வெளியிட வேண்டும்.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.