மாணவர்களுக்கான “ப்ளூ பிரிண்ட்” குறித்த தகவல் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது பல்வேறு துறைகளில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் தேதியை நிர்ணயிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டியது உள்ளது.

நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும், ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா? என்று நவம்பர் 11-ந் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில், பொதுத்தேர்வு தேதியை நிர்ணயித்தல், 40 சதவீத பாடக்குறைப்பு, பள்ளிகள் திறப்பு தேதியை முடிவு செய்தல், 2-ம் பருவ புத்தகம் வழங்குதல், நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்களை ஆய்வு செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பாடத்திட்டங்களை குறைப்பதற்கான ‘புளு பிரிண்ட்’ ஐ மாணவர்களுக்கு அளிப்பது தொடர்பாக முதல்- அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x