அனல்மின் நிலைய விபத்து; அதிகாரி சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி 2 ஆவது அனல் மின் நிலையத்தில் உள்ள 5 ஆவது யூனிட்டில் நேற்று திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், உள்ளே சிக்கியிருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே 6 ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்ததோடு பலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சமீபத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்ததால், என்.எல்.சியில் அலட்சியமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து என்.எல்.சி 2 ஆவது அனல்மின் நிலைய மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 27,000 ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இதில் 15,000 பேர் ஒப்பந்த ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.