வேனில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா.. 7 பேரை கைது செய்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா போலீசார் சோதனையில் சிக்கியதையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி ரவளிபிரியா உத்தரவின்பேரில் போலீசார் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை அருகே தங்கம்மாபட்டி செக்போஸ்ட்டில் எஸ்பி தனிப்படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி உள்ளே இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தில் ஆய்வு செய்ததில், காலியான தக்காளி பழ பெட்டிகளின் அடியில் இதில் 200 கிலோ கஞ்சா விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது.
மேலும், ஏற்கனவே கடத்திய 100 கிலோ கஞ்சா திண்டுக்கல் சீலப்பாடி அருகே வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த வடமதுரை போலீசார், திண்டுக்கல் கிருஷ்ணமூர்த்தி 28, சோணைமுத்து 31, பரணி 33, யுவராஜ் 33, ராகவன் 29, பண்டியப்பன் 52, ஜெய்சங்கர் 29 ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் வீடு ஒன்றில் 80 கிலோ கஞ்சா பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.