தமிழர் திருநாளான பொங்கலுக்கு விடுமுறை அறிவித்த உச்சநீதிமன்றம்!!
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக தமிழர் திருநாளான பொங்கலுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள், வடமாநில பண்டிகைகள் சிலவற்றுக்கும் மட்டுமே உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். தமிழர்களின் முதல் முக்கிய பண்டிகையாக கருதப்படுவது பொங்கல். உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான தமிழர்கள் வழக்கறிஞர்களாகவும், ஊழியர்களாகவும் பணியாற்றிய போதிலும், அதற்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிப்பது கிடையாது. பொங்கல் தினத்தன்றும் உச்ச நீதிமன்றம் செயல்படும்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மகர சங்கராந்தி, பிஹூ என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்துக்கு பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதில்லை.
உச்ச நீதிமன்றம் ஆண்டுக்கு 191 நாட்கள் மட்டுமே செயல்படும். மற்ற 174 நாட்கள் விடுமுறையில் இருக்கும். மேலும், வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்படும். மேலும், அனைத்து இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை விடப்படும்.
இந்நிலையில், வரலாற்றில் முதல்முறையாக அடுத்தாண்டு ஜனவரி 14, 15ம் தேதிகளில் உச்ச நீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.