மன்னிப்புக் கேட்ட சுற்றுலாப் பயணி.. சரமாரியாகத் தாக்கிய போலீஸார்..?

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதை கடந்த அக்டோபரில் திறக்கப்பட்டது. ஹிமாச்சலப்பிரதேசத்திலுள்ள மணாலியையும், லடாக்கின் லே நகரையும் இணைக்கும் வகையில் 9.2 கிலோமீட்டர் நீளமானது இந்த இருவழி சுரங்கப்பாதை. ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்துடன் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட இச்சுரங்கப்பாதையை தினந்தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வந்தனர்.
கடந்த சனிக்கிழமையன்று ஹிமாச்சலப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அடல் சுரங்கப்பாதைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவின் காரணமாக அங்கு ஏராளமான வாகனங்கள் திரும்பிச் செல்ல இயலாமல் திக்குமுக்காடி நின்றன. தகவலறிந்து உடனடியாக விரைந்த போலீஸார் அங்குள்ள வாகனங்களை மீட்டனர்.
அப்போது வரிசையாகச் சென்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு மத்தியில் அங்கிருந்த சுற்றுலாப்பயணியான இளைஞர் ஒருவர் தனக்கு முன்பு நின்ற வாகனத்தை முந்திக்கொண்டு செல்ல முயற்சித்தார். அதைத் தடுத்து நிறுத்திய போலீஸார் சிலர் அந்த இளைஞரை வண்டியிலிருந்து வெளியே வரவழைத்து மண்டியிடவைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போலீஸார் தொடர்ந்து அவரை இரக்கமின்றி தாக்கியபோது, அவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார். இருந்தும், போலீஸார் தொடர்ந்து அவரை மிகவும் மோசமான முறையில் தாக்கியுள்ளனர். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக வாகனங்கள் நகர்ந்ததால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். இச்சம்பவம் முழுவதையும் அருகிலிருந்த சுற்றுலாப்பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, அந்த வீடியோ வைரலாகியிருக்கிறது.