போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை பாரதி சிங் மற்றும் அவரது கணவருக்கு ஜாமீன்; மும்பை கோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை பாரதி சிங் மற்றும் அவரது கணவருக்கு மும்பை கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், இந்தி திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடந்த சனிக்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை அந்தேரியில் உள்ள நகைச்சுவை நடிகை பாரதி சிங்கின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அவரது வீட்டில் இருந்து 86.5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து நடிகை பாரதி சிங் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாசியாவும் கைதானார். அவர்கள் மீது போதைப்பொருள் பதுக்கி வைத்தல், பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இருவரும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் வருகிற 4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதற்கிடையே இருவரும் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆஜராகிய அவர்களது வக்கீல், நடிகை பாரதிசிங் வீட்டில் இருந்து சிறிய அளவில் தான் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இருவரும் வேறு எந்த குற்ற பின்னணியும் இல்லாதவர்கள். எனவே அவர்கள் தலைமறைவாக மாட்டார்கள் என்பதால், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து ஜாமீன் மனு மீது பதிலளிக்க காலஅவகாசம் தேவை என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்டு, நடிகை பாரதி சிங் மற்றும் அவரது கணவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனுக்காக அவர்கள் தலா ரூ.15 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x