இருளில் மூழ்கிய இலங்கை… !! ஏழு மணி நேரத்திற்குப் பின்…

இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கெரவலபிடியா என்ற இடத்தில் துணை மின்நிலையம் இயங்கி வருகிறது. இலங்கையின் பிரதான மின் நிலையங்களில் ஒன்றான இங்கு நேற்று இரவு திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த இலங்கையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியது.
இந்த திடீர் மின்வெட்டால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். சாலைகளில் போக்குவரத்து சிக்னல் செயல்படாததால், பல்வேறு பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரும் அவதியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகளில் என்ஜினீயர்கள் மற்றும் மின்வாரிய மூத்த அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன் பலனாக கொழும்புவில் பல்வேறு இடங்களிலும், தெற்கு மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் 7 மணி நேரத்துக்குப்பின் மின்இணைப்பு சீரானது. எனினும் மீதமுள்ள பகுதிகளில் இரவு நெடுநேரமாகியும் மின் இணைப்பு முழுமை அடையவில்லை. இந்த தடங்கலுக்கு நாசவேலை காரணமாக இருக்காது எனக்கூறிய மின்சாரத்துறை மந்திரி டல்லஸ் அலகப்பெருமா, எனினும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.