“தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் திருச்சி தான்!” அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திடீர் போர்க்கொடி!

கடந்த சில நாட்களாக சென்னையை தவிர இன்னொரு தலைநகரம் அமைக்க வேண்டும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. குறிப்பாக அமைச்சர் உதயகுமார் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டுமென திடீரென குரல் கொடுத்ததால் அமைச்சர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே திடீரென ஏற்பட்ட பரபரப்பை மறக்கடிப்பதற்காக இந்த இரண்டாவது தலைநகரத்தை விவகாரத்தை அமைச்சர்கள் கையில் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை தான் இரண்டாவது தலைநகர் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி தான் இரண்டாவது தலைநகர் என்றும் திருச்சியைத்தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில், “எம்ஜிஆரின் கனவே திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றுவதுதான் என்பதால் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிப்பதே சரியான முடிவாக இருக்கும். மேலும் திருச்சியில் எப்போதும் தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்காது என்றும் எனவே திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர் முதல்வரிடம் தாங்கள் கோரிக்கை வைக்கப் போவதாகவும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா உள்ளிட்ட பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் திடீரென இரண்டாவது தலைநகரம் குறித்த பிரச்சனை எதனால் எழுந்தது என்று பொது மக்கள் குழப்பத்தில் உள்ளனர்