காவல்துறையினருக்காக எதிர்கட்சிகளும், மனித உரிமை ஆணையமும் கேள்வி எழுப்பாதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!

காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் உயிராக தெரியவில்லையா? என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரின் இறுதி அஞ்சலியில் தெண்மண்டல ஐஜி முருகன், தமிழக டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் கலந்துகொண்டு, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்தநிலையில், “தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச்சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? எனவும், ரவுடிகள் இறக்க நேரிடும் போது கேள்வி கேட்கும் மனித உரிமைகள் ஆணையம், காவல்துறையினர் ரவுடிகளால் கொல்லப்படும் போது முன் வந்து கேள்வி எழுப்பாதது ஏன்?” என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறதாக தெரிவித்த நீதிபதி, “ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்” என தெரிவித்தார்.