சைபர் கிரைம் போலீஸாரையே அதிர வைத்த நாகர்கோவில் காசி!!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காசியின் செல்போனை சோதனையிட்டபோது அதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் தொடர்பு எண்கள் இருந்ததை பார்த்து சைபர் கிரைம் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பெண்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்ததாக நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி(28) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கல்லூரி மாணவிகள், மருத்துவர், ஆசிரியை என பலரும் புகார் தெரிவித்த நிலையில் 7 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. சிபிசிஐடி வசம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த காசியை சிபிசிஐடி போலீஸார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவரது லேப்டாப்பில் அழிக்க முயன்ற 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ, படங்களை சைபர் கிரைம் போலீஸார் மீட்டனர்.
அதில் பெண்கள், மாணவிகளுடன் அவர் நெருக்கமாக இருக்கும் படங்களும் இருந்தன. இவற்றில் பல படங்கள் மார்பிங் செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது செல்போனையும் சைபர் கிரைம் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடர்பு எண்களை பதிவு செய்திருந்தார்.
இதில் பாதிக்கும் மேற்பட்டவை பெண்களின் எண்களாக இருந்தது. இவற்றில் பெரும்பாலும் அவர், வீடியோ கால் மூலம் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போனில் ஆயிரக்கணக்கான தொடர்பு எண்கள் இருப்பதை கண்டு சைபர் கிரைம் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் இருந்த எண்களில் உள்ள பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் புகார் அளித்து, மோசடி குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பெண்களின் முகவரி, விவரங்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதாக தெரிவித்துள்ள சிபிசிஐடி போலீஸார், அவர்களிடம் இருந்து முக்கிய ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.