“பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திலும் கோடிக்கணக்கில் ஊழல்” – எம்.பி. விஷ்ணுபிரசாத் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், ஆரணி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் விஷ்ணுபிரசாத் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதம மந்திரியின் ஆவாஷ் யோஜனா திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்த சில ஆவணங்களை காண்பித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கிஷான் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால், இதற்கு முன்பாகவே கடந்த பிப்ரவரி மாதம் பிரதம மந்திரியின் ஆவாஷ் யோஜனா என்ற வீடுகட்டும் திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்துள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்து இருந்தேன். அப்போதே கலெக்டர் சரியான நடவடிக்கை எடுத்து இருந்தால் கிஷான் திட்டத்தில் இவ்வளவு பெரிய ஊழலை தடுத்து இருக்க முடியும்.

மத்திய அரசின் ஆவாஷ் யோஜனா என்ற பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் தருகிறார்கள். ஆனால், உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலகட்டமான 2016-2019-ல் சிறப்பு அதிகாரிகளின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது குறித்து எனது ஆரணி தொகுதியில் கள ஆய்வு மேற்கொண்டோம்.

அதில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திற்கு தகுதி இல்லாதவர்களின் பெயர்களில் வீடு கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஒரே ஒரு பஞ்சாயத்தில் மட்டும் 4 வீடுகள் கட்டப்படாமலே கட்டப்பட்டதாக பதிவாகி இருப்பது தெரிய வந்தது. இதே போன்று, ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் 800 பேருக்கு வீடு கட்டி கொடுத்ததாக பொய்யான தகவல் பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமே ஒரு ஆண்டில் 5 ஆயிரம் வீடுகள் தவறான முறையில் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து லோக் ஆயுக்தாவில் நானே நேரடியாக சென்று புகார் அளித்துள்ளேன். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருக்கிறது. இதில் தவறு செய்த அதிகாரிகளை சிறைக்கு அனுப்பி, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும். இது குறித்து முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும் கடிதம் எழுதி உள்ளேன். தேவைப்பட்டால் கவர்னரை நேரில் சந்தித்து எடுத்துரைப்பேன். நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் இது குறித்து கேள்வி எழுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x