அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு இனி மருத்துவ துறையில் 7.5% இடஒதுக்கீடு!!!

நீட் தேர்வு அச்சத்தால் நேற்று மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது.
ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்’என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய அறிக்கைக்கு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் சூர்யாவை கடுமையாக விமர்சித்தனர். இந்தநிலையில், நீட் தேர்வில் தேர்ச்சியடையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்த சூர்யாவின் ட்விட்டர் பதிவில், ‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்… மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…’ என்று குறிப்பிட்டுள்ளார்.