‘தமிழர்களின் உணர்வுடன் விளையாடாதீர்கள்!” திமுக தலைவர் விடுத்த எச்சரிக்கை!!
இந்தி தெரியாததால்,கடன் கிடையாது என்ற விவகாரம் தொடர்பாக “தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிடும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த இவர், தற்போது தனது பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவருக்கு தனது சொந்த ஊரான கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) கணக்கு வைத்துள்ளார். இதனையடுத்து தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக அந்த வங்கியின் மேலாளரான விஷால் நாராயணனிடம் ஆவணங்களை சமர்பித்து கடன் கோரியுள்ளார். ஆனால், வங்கி மேலாளரோ இந்தி தெரியாததால் கடன் கிடையாது எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தி தெரியாவிட்டால் வங்கிக் கடன் கிடையாதா? – ஜெயங்கொண்டம் @IOBIndia அதிகாரியொருவர் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ஆணவத்தைக் காட்டியிருக்கிறார்!
இந்தி வெறியை வளர்த்தெடுப்பது பேரபாயம்!
தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும்! எச்சரிக்கை!#StopHindilmposition
— M.K.Stalin (@mkstalin) September 22, 2020
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவில் அவர், “இந்தி தெரியாவிட்டால் வங்கிக் கடன் கிடையாதா? – ஜெயங்கொண்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியொருவர் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ஆணவத்தைக் காட்டியிருக்கிறார். இந்தி வெறியை வளர்த்தெடுப்பது பேரபாயம். தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும். எச்சரிக்கை!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அவ்வங்கியின் மேலாளர் விஷால் நாராயணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.