ஒரு லட்சத்துக்கும் மேலான அரியர் மாணவர்கள் தேர்ச்சி-சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!!!

சென்னை:
ஏப்ரலில் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி வழங்கி சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது.
கொரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த கல்லூரி பருவத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதை தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டு அடுத்த ஆண்டு படிப்பை தொடர அனுமதி அளிக்கப்பட்டது. கடைசி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான கடைசி பருவத்தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைனில் நடத்தப்பட்டது.
மேலும் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் படி ஏப்ரலில் தேர்வு எழுதுவதற்காக கட்டணம் செலுத்திய சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுமார் 150 உறுப்பு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1.2 லட்சம் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் சென்னை பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் மதிப்பெண் தேவைப்படுவோர் அடுத்து அறிவிக்கப்படும் தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.