அமெரிக்காவில் ஜோபைடன் அமைத்த கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இடம்பெற்ற தமிழக பெண் மருத்துவர்!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட பெண் மருத்துவர் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட இந்த குழுவின் தலைமைப் பொறுப்பில் 3 பேர் உள்ளனர். அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியை சேர்ந்த செலின் ராஜ் கவுண்டர் என்ற பெண் மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
செலின் ராஜ் கவுண்டர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தவிர அமெரிக்க நாட்டின் காநோய் தடுப்பு பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் தென் ஆப்ரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இது மட்டுமின்றி, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களை பாதிக்கும் நோய்கள் குறித்தும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவர் ஆராய்ச்சி செய்துள்ளார்.
செலின் ராஜ் கவுண்டரின் தந்தை ராஜ் கவுண்டர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1966 ஆம் ஆண்டில் அமெரிக்காச் சென்று, அந்நாட்டு விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபோது, அந்த நாட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து அங்கேயே வசித்து வருகிறார். அவருக்கு 3 பெண் பிள்ளைகள், அதில் மூத்தவர் தான் செலின் ராஜ் கவுண்டர். 35 வயதான செலின் ராஜ் கவுண்டரின் கணவர் கிராண்ட் அமெரிக்காவில் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார்.