பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20: முதல் முறையாக பிஎஸ்எல் கோப்பையை முத்தமிட்டது கராச்சி கிங்ஸ் அணி……
கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் கராச்சி கிங்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப் போட்டியில் சோகைல் அக்தர் தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியுடன் இமத் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி மோதியது.
டாஸ் வென்று பேட் செய்த லாகூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. தொடக்க வீரர்கள் தமிம் இக்பால் 35 ரன், பகார் ஸமான் 27 ரன், கேப்டன் சோகைல் அக்தர், டேவிட் வைஸ் தலா 14 ரன் எடுத்தனர். கராச்சி பந்துவீச்சில் வகாஸ் மக்சூட், அர்ஷத் இக்பால், உமைத் ஆசிப் தலா 2, இமத் வாசிம் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய கராச்சி அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து முதல் முறையாக பிஎஸ்எல் கோப்பையை முத்தமிட்டது. அபாரமாக விளையாடிய பாபர் ஆஸம் ஆட்டமிழக்காமல் 63 ரன் விளாசி (49 பந்து, 7 பவுண்டரி) ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். ஷர்ஜீல் 13, ஹேல்ஸ் 11, வால்டன் 22 ரன் எடுத்தனர். கராச்சி அணிக்கு முதல் பரிசாக 3.72 கோடி வழங்கப்பட்டது.