வேலையை இழந்த மற்றும் இழக்கும் பணியாளர்களின் சிறப்பு ஊதியம் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க ஆலோசனை!!!
கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 50 சதவீத சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையானது ஈஎஸ்ஐசி (ESIC – Employees State Insurance Corporation) அமைப்பின் உறுப்பினர்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில் துறை முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டது. வருவாய் இல்லாமல் போனதால் நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. சில நிறுவனங்கள் சம்பளத்தையும் புதிய வேலைவாய்ப்புகளையும் குறைத்தன. அனைத்துத் துறைகளிலும் இதே நிலை நீடித்தது. பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
ஆனாலும், வேலையை இழந்தவர்களுக்கு எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை. இதுபோன்ற சூழலில் மத்திய அரசு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
மார்ச் 24 முதல் இந்த ஆண்டின் டிசம்பர் 31 வரையில் வேலையை இழந்த அல்லது வேலையை இழக்கும் பணியாளர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 40 லட்சம் தொழில் துறை ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, தேவைப்பட்டால் இத்திட்டத்தை அடுத்த ஆண்டின் ஜூன் மாத இறுதிவரை நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாத இறுதியில் அப்போதைய சூழ்நிலையை ஆராய்ந்து அடுத்த கட்ட முடிவு மேற்கொள்ளப்படும் என்று ஈஎஸ்ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.