சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பதுக்கிய 1,765 கிலோ ரேஷன்அரிசியை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி பகுதியில் பறக்கும்படையினர் அடிக்கடி சோதனையிட்டாலும் ரேஷன் அரிசி கடத்தல் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் நேற்று இரவு அருகே கோட்டையூர் டெலிபோன் காலனியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் பறக்கும்படை வட்டாட்சியர் தமிழரசனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வட்டாட்சியர் தமிழரசன், துணை வட்டாட்சியர் சேகர் தலைமையிலான பறக்கும்படையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அங்கு தகர கொட்டகையில் 38 மூடைகளில் 1,765 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
விசாரணையில் கடத்தல் ரேஷன் அரிசியை பதுக்குவதற்காகவே இந்த தகர கெட்டகை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் பதுக்கி வைத்திருந்தவர் கோட்டையூர் குருநாதன் கோயில் தெருவைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூடைகளை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பறக்கும்படையினர் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவான லட்சுமியை போலீஸார் தேடி வருகின்றனர்.
