‘இதுதான் உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்’, ‘மனித நேயத்தை சிராஜ் வெளிப்படுத்திவிட்டார்’!!!ஆஸ்திரேலிய ஊடகங்கள் புகழாரம்….
சிட்னியில் நேற்று தொடங்கிய 3 நாள் பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் பும்ரா அடித்த பந்து, பந்துவீச்சாளர் கேமரூன் தலையில் பட்டவுடன், ரன் ஓடுவதை விட்டு, பேட்டை உதறி அவருக்கு இந்திய வீரர் முகமது சிராஜ் உதவி செய்தது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
வரும் 17-ம் தேதி இந்தியா – ஆஸி. அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் ஆட்டம் அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக, பிங்க் பந்தில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கு முன்பாக 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் சிறப்பாக பேட் செய்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்து 55 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசி விக்கெட்டுக்கு முகமது சிராஜ் (22), பும்ரா (55) இருவரும் சேர்ந்து 71 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸி. அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 108 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி 86 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட் செய்தபோது, 45 ஓவரை ஆஸி.வேகப்பந்துவீச்சாளர் கேமரூன் கிரீன் வீசினார்.
களத்தில் பும்ரா எதிர்கொண்டார். கேமரூன் ஆப்சைடு விலக்கி வீசிய பந்தை பும்ரா ஸ்ட்ரெயிட் ட்ரைவாக தூக்கி அடித்தார். பந்து கேமரூன் தலைக்கு நேரே சென்றதால், அதைப் பிடிக்க அவர் முயன்றார். பந்து வந்த வேகத்தில் அதைப் பிடிக்கத் தவறியதால், கேமரூன் தலையின் வலது பக்கத்தில் பந்து பட்டது.
வலியில் துடித்த கேமரூன் தலையைப் பிடித்தவாறே தரையில் விழுந்தார். இதைப் பார்த்த நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருந்த முகமது சிராஜ் ரன் ஓடுவதை நிறுத்திவிட்டு தனது பேட்டை கீழே வீசி எறிந்துவிட்டு உடனடியாக ஓடிவந்து கேமரூனுக்கு உதவி செய்தார். ஆனால், மறுபுறம் பும்ரா ரன் எடுக்க ஓடி நான் ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு வந்துவிட்டார்.
எதிரணி வீரர் காயம் அடைந்தவுடன் ரன் ஓடுவது முக்கியமல்ல, அவருக்கு உதவி செய்வதுதான் முக்கியம் என்று முகமது சிராஜ் ஓடிச் சென்று உதவி செய்ததை ஆஸ்திரேலிய ஊடகங்களும், நெட்டிசன்களும் புகழ்ந்து வருகின்றனர். நடிகர் அமீர்கானும் அந்த வீடியோவை ஷேர் செய்து பாராட்டியுள்ளார்.
‘இதுதான் உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்’, ‘மனித நேயத்தை சிராஜ் வெளிப்படுத்திவிட்டார்’, ‘சிராஜைப் பார்த்து பெருமைப்படுகிறோம்’ இதயங்களை வென்றுவிட்டார் சிராஜ், என்று நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
அதன்பின் மருத்துவ வல்லுநர்கள், உடற்தகுதி நிபுணர்கள் வந்து கேமரூனுக்கு ஏற்பட்ட காயத்தை ஆய்வு செய்தனர். கேமரூன் தொடர்ந்து வலியால் துடித்தது மட்டுமல்லாமல் தலையில் காயம் வீங்கத் தொடங்கியது. இதையடுத்து, கன்கஸனில் கேமரூன் வெளியேறினார். அவருக்குப் பதிலாக பேட்ரிக் ரோவ் களமிறங்கினார்.