‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக தேடப்பட்ட மாணவியின் தந்தை கைது!!

நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக மாணவியின் தந்தையான பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர். மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் போலி ‘நீட்’ மதிப்பெண் சான்றிதழுடன் மாணவி தீக்‌ஷா(வயது 18) என்பவர் கலந்து கொண்டார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பல் டாக்டரான பாலச்சந்திரன் என்பவரின் மகள் ஆவார். அவர் கலந்தாய்வில் தாக்கல் செய்த ‘நீட்’ தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று கண்டறியப்பட்டது.

அந்த மாணவி ‘நீட்’ தேர்வில் பெற்ற உண்மையான மதிப்பெண் 27. ஆனால் மருத்துவ கலந்தாய்வில் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் மையம் மூலமாக 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் சான்றிதழில் பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை மீது, சென்னை பெரியமேடு போலீசில், மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாணவி, அவரது தந்தை இருவரையும் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பெரியமேடு போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். அதற்கு அவர்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

பரமக்குடியில் உள்ள தங்கள் வீட்டை பூட்டிவிட்டு அவர்கள் குடும்பத்தோடு தலைமறைவு ஆகிவிட்டனர். அவர்களை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தனது வக்கீலை பார்த்து பேசுவதற்காக மாணவியின் தந்தை டாக்டர் பாலச்சந்திரன் நேற்று சென்னை வந்ததாக தெரிகிறது.

அப்போது அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மாணவியை போலீசார் வலைவீசி தேடிவருவதாக கூறினர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x