மாஸ்க் போட்டு திருடி விட்டு, அதை கழட்டி முகத்தை சொரிந்த திருடன்: வலைவீசிப் பிடித்த போலீசார்

கொல்கத்தாவில் வணிக வளாகத்தில் மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் கைது செய்தனர்.
கொரோனாவுக்கு பிறகு முகத்தில் மாஸ்க் அணிவது நம்முடைய ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென்று அரசு விரும்புகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பது மாஸ்க் மட்டுமே என்கிறது உலக நாடுகள்.
மக்கள் பலரும் மாஸ்கை விரும்பாத நிலையில், சில குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் மாஸ்கை கண்டிப்பாக அணியத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் குற்றவாளிகள் மாஸ்க் அணிந்திருப்பது போலீசாருக்கு சிக்கலாகவும் உள்ளது.
அதேபோல் ஒரு சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. ரதன் பட்டாச்சாரியா என்ற நபர் வணிகவளாத்தில் புகுந்து பெண் ஒருவரின் கைப்பையை திருடியுள்ளார். அதில் ரூ.99 ஆயிரத்து 300 இருந்துள்ளது. முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு சாமர்த்தியமாக கைப்பையை திருடிவிட்டு வெளியேறிவிட்டார் ரதன்.
வெளியே சென்ற அவர் மாஸ்கை கழட்டி முகத்தை சொரிந்துள்ளார். இது சிசிடிவி கேமராவில் பதிந்ததின் மூலம் அவரின் அடையாளத்தை கண்டுபிடித்த போலீசார் தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர்.