போலி பொருட்கள்: ஸ்னாப்டீல் மீது அமெரிக்கா வழக்கு..

இந்தியாவில் ‘ஸ்நாப்டீல்’ மற்றும் நான்கு முக்கிய வர்த்தக சந்தைகளில் போலிப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக கிரிமினல் வழக்கும் தொடர்ந்திருக்கிறது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் போலிப் பொருட்கள் சந்தை குறித்த ஆய்வறிக்கையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் மும்பையின், ஹீரா பன்னா, கோல்கட்டாவின் கிடர்போர், டில்லியின் பாலிகா பஜார், டேங்க் ரோடு ஆகிய நான்கு வர்த்தக சந்தைகளில், போலிப் பொருட்கள் அதிக அளவில் விற்கப்படுகின்றன. இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீலிலும் போலிப் பொருட்கள் விற்பனை நடப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இத்தகைய போலிப் பொருட்கள் இறக்குமதியால், அமெரிக்க தொழில் நிறுவனங்களும், நுகர்வோர்களும், அறிவுசார் சொத்துரிமை உள்ளோரும் பாதிக்கப்படுகின்றனர். மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது, போலி பொருட்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, போதுமான சட்டங்கள் இல்லாததே இதற்கு காரணம். இருந்தபோதிலும், சீனா, ஹாங்காங், இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் போலிப் பொருட்கள், அவ்வப்போது பறிமுதல் செய்யப்படுகின்றன.
கடந்த, 2018 நிலவரப்படி, ஸ்நாப்டீல் வலைதளத்தில், போலிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக, 37 சதவீதம் பேர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, இந்தியாவில், ஸ்நாப்டீல் நிறுவனர்கள் மீது, கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது.