லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு ஆப்பு வைத்த நபர்

வேளாண் நிலம் அருகே வீடு கட்டி குடியேறுவதற்காக தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்த நபரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட வேளாண் துறை துணை இயக்குனர் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் கையும் களவுமாக சிக்கினார்.
சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் ( 54). இவருக்கு சென்னையை அடுத்து உள்ள புறநகர் பகுதியான காட்டாங்கொளத்தூரில் சொந்த நிலம் உள்ளது. நின்னகரை கிராமத்தில் உள்ள அந்நிலத்தில் வீடு கட்ட விரும்பினார்.
அதற்கு தடையில்லா சான்று வேளாண் துறையிடம் பெற வேண்டும் என்பது தெரிந்தது. இது தொடர்பாக செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரத்தில் அமைந்துள்ள மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில், மூன்று மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தை பரீசிலிக்காத துணை இயக்குனர் சுகுமார் ரூ.20 ஆயிரம் கேட்டுள்ளார். அவரிடம் சரி பணத்தை தருகிறேன் என்று கூறிய ஆனந்தன், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அவர்கள் தந்தனர். அதனை அதிகாரியிடம் ஆனந்தன் தந்தார். அப்போது மறைந்திருந்த 10 போலீசார் சுகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.