தீக்குளித்த மாணவி பரிதாப சாவு: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்ற வாலிபரின் மிரட்டலுக்கு பயந்து தீக்குளித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி பரிதாபமாக இறந்தார். மிரட்டல் விடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வாழப்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற ராமச்சந்திரன் (வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவியான 14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர், விக்னேசிடம் இருவருக்கும் அண்ணன்-தங்கை உறவு முறை என்பதால் காதல் என்று சொல்லி அசிங்கப்படுத்த வேண்டாம் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை காதலிக்க சொல்லி விக்னேஷ், மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த மாணவி கடந்த 29-ந் தேதி வீட்டில் இருந்தபோது மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் அலறி துடித்த மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று சிறுமியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், மாணவியை காதலிக்க சொல்லி கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காகவும், தற்கொலைக்கு தூண்டியதற்காகவும் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் விக்னேஷ் மீது வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை கைது செய்தனர். இந்த சம்பவம் வாழப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.