மாயமான 8 வயது சிறுமி – மூன்றாவது நாளாக தேடும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மாயமான 8 வயது சிறுமியை 3 வது நாளாக தேடும் பணியில், போலீசாருடன் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே துாதுார் மட்டம் அருகே கிரேக் மோர் எஸ்டேட்டில் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். இங்கு தொழிலாளர் குடியிருப்பில் லட்சுமணன் என்பவரின் 8 வயது மகள் கடந்த 21ம் தேதியில் இருந்து காணவில்லை. முதல் நாள் தொழிலாளர்கள் தேடி வந்த நிலையில், கிடைக்காததால் 22ம் தேதி கொலக்கம்பை போலீசில் புகார் கொடுத்தனர்.
தொடர்ந்து டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணையை துவக்கினர். இதில் 15 வயதுடைய நபர், முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததை தொடர்நது, சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். 3வது நாளாக இன்றும் தேடும் பணி துவங்கி நடந்து வருகிறது. இன்று தீயணைப்பு துறையினர், போலீசார், வனத்துறையினர் இணைந்து தேடுகின்றனர்.