மகன் மீது ஆத்திரம் அடைந்த தந்தை.. கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொலை..?

கஞ்சா மற்றும் மது அருந்த தந்தையை பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தியும் கல்லால் அடித்தும் மகனை கொலை செய்து காவல் நிலையத்தில் இன்று மாலை சரணடைந்தார்.
திருத்தணி செட்டிகுளம் தெருவில் வசித்து வருபவர் பழனி(50). திருத்தணி ம.பா.சி. சாலையில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் கோகுல் (21) தந்தையுடன் வசித்து வந்தார்.கடந்த சில மாதங்களாகவே கோகுலுக்கு கஞ்சா மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மதுபோதைக்கு அடிமையான கோகுல் அடிக்கடி தந்தை பழனியிடம் பணம் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை மார்க்கெட்டில் இருந்த தந்தை பழனியிடம் மகன் கோகுல் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனி காய்கறி வெட்டும் கத்தியால் குத்தியும், கல்லால் முகத்தை சிதைத்து கோகுலை கொலை செய்தார்.
அதைத் தொடர்ந்து பழனி தானே நேரடியாக திருத்தணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து திருத்தணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருத்தணி காய்கறி மார்க்கெட்டில் இருந்த கோகுலின் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருத்தணி பஜாரில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.