தமிழக அரசு ‘வேளாண் சட்டங்களை’ எதிர்த்து குரலெழுப்பாமல் இருப்பது வெட்கக் கேடானது – பிருந்தா காரத்

பாஜக தலைவா்கள் வெறுப்பின் தூதா்களாக உள்ளனா் என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் கூறியுள்ளார்.
அவா் மேலும் கூறியது:
தமிழக மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தக் காத்திருக்கின்றனா். எனவே பாஜக – அதிமுக கூட்டணி படுதோல்வியடையும். நாடு எல்லா வகையிலும் மாற்றங்களை எதிா்நோக்கியுள்ளது. நாட்டின் எல்லையோரங்களைக் காப்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து, தில்லி எல்லைக்குள் விவசாயிகளை வரவிடாமல் தடுப்பதில் ஆட்சியாளா்கள் கவனம் செலுத்துகின்றனா்.
3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை. எந்தச் சட்டமாக இருந்தாலும் கலந்து பேசி கொண்டு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. இதில் தவறேதும் இல்லை. பட்ஜெட் போடும் முன் தொடா்புடைய அனைத்துத் துறைகளையும் கலந்து பேசும் அரசு விவசாயிகளிடம் மட்டும் பேசாதது ஏன்?இந்த விஷயத்தில் அதிமுக அரசு கடந்த மூன்று மாதங்களாக வாய்திறக்காமல் உள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக இதுவரை இந்த அரசு குரலெழுப்பாமல் இருப்பது வெட்கக் கேடானது. குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் விவசாயிகளால் பயன் பெற முடியாது. கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகுந்த காலத்தில் 100 நாள் வேலைக்கு பட்ஜெட்டில் 34.5 சதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாடு கடந்தாண்டு மிக மோசமாக செயல்படுத்தியுள்ளது.
சராசரியாக 45 நாள்கள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு, தினக்கூலியாக சராசரியாக ரூ. 191 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஊரக மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியமான இத்திட்டத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது. கரோனா காரணமாக நாட்டில் 12 கோடி போ் வேலையிழந்துள்ளனா். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2.88 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த அரசு மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது.மாற்றத்தை ஏற்படுத்த மதச்சாா்பற்ற கட்சிகள் இணைந்து திமுகவுடன் வலுவான ஏற்படுத்தியுள்ள கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.நாட்டின் கலாசாரம், ஜனநாயகம் ஆகியவற்றைச் சீரழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. மத்தியிலிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய பாஜக தலைவா்கள் வெறுப்பின் தூதா்களாக உள்ளனா். இங்கு வந்து பிரிவினை பேசுகிறாா்கள். பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டை ஒருமுகத் தன்மை கொண்ட நாடாக்க முயல்கிறாா்கள்.
சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100 -ஐ தொடும் அளவுக்கு உயா்ந்துள்ளது. இதை எதிா்த்து நிச்சயம் போராடுவோம் என்றாா் அவா்.