மன்னார்குடியில் ஒரே கிராமத்தில் 140 வீடு மாயம்!!! என்ன நடந்தது?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒரே கிராமத்த்தில் 140 வீடுகள் காணாமல் போய் இருப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் கொடுத்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் வடிவேல் நடித்த “கிணத்தை காணோம்” காமெடி தமிழகம் முழுக்க வைரலான காமெடியாகும். கட்டாத கிணறை காணாமல் போய் விட்டதாக வடிவேல் போலீசில் புகார் அளித்து பிரச்சனை செய்வார். கிணறு கட்டுன ரசிது என்னிடம் இருக்கிறது, விடமாட்டேன் என்று போலீசில் புகார் அளிப்பார்.
இந்த நிலையில் தற்போது அதே போல திருவாரூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மன்னார்குடி அருகே தலையாமங்கலம் ஊராட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 225 வீடுகள் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. 2016ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2019 இறுதிக்குள் ஒப்பந்தத்தை முடித்து வீடுகளை, மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இப்போது வரை அங்கு 85 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கிறது. மீதம் இருக்கும் 140 வீடுகளை கட்டாமல் ஏமாற்றி உள்ளனர். எனினும், வீடு கட்டிவிட்டதாக மத்திய அரசுக்கு கணக்கு காட்டி உள்ளனர். இதற்காக அந்த 140 நபர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்துள்ளனர்.

5 கோடி ரூபாய் வரை நடந்த மோசடியில், உள்ளூர் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வடிவேல் பாணியில், எங்கள் வீட்டை காணோம், மொத்தம் 140 வீட்டை காணோம் என்று புகார் அளித்துள்ளனர்.

“மத்திய அரசு சார்பாக எங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இதற்கான பத்திரம், ஆதாரங்கள் உள்ளது. ஆனால வீட்டை காணவில்லை. பத்திரத்தில் வீடு இருப்பதாக ஆதாரம் உள்ளது. அதனால் வேகமாக எங்கள் வீட்டை கண்டுபிடித்து கொடுங்கள். 140 வீட்டையும் மொத்தமாக கண்டுபிடித்து கொடுங்கள்” என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர்.