பெயரோடு ஜாதிப்பெயர்… கே.எஸ். அழகிரி செயலுக்கு புதுவிளக்கம்…

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுக்கும் அறிக்கைகளில் ஜாதிப்பெயர் ஏன் குறிப்பிடப்படுகிறது என்பதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய தலைவர்களில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ்.அழகிரியும் ஒருவர். அவர் விடுக்கும் அறிக்கைகள் அனைத்தும் புள்ளிவிவரங்களுடன் ஆனித்தரமான குற்றச்சாட்டுக்களுடன் இருக்கும். இதனிடையே அண்மையில் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கைகளில் ஜாதிப்பெயர் இடம்பெற்றிருந்தது அவரை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது.
உதாரணத்துக்கு, சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் விவகாரத்தில் ஜெயராஜ்,பெனிக்ஸ் என்று குறிப்பிட்டு தான் அனைத்துக் கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள். ஆனால் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கையில் ஜாதிப்பெயரை இணைத்து ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் நாடார் என்று வரிக்கு வரி அதனை சுட்டிக்காட்டியிருந்தார். இதேபோல் காங்கிரஸ் மூத்த நிர்வாகி எத்திராஜ் மறைவின் போது அவருக்கு விடுத்த இரங்கல் அறிக்கையில் எத்திராஜ் முதலியார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
கே.எஸ்.அழகிரியின் இந்த செயல்பாடுகளை அவரது கட்சியினர் சிலர் விமர்சித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.பீட்டர் அல்போன்ஸ் இது தொடர்பாக தனது எதிர்ப்பை சூசகமாக ட்வீட்டரில் தெரிவித்திருந்தார். அதேபோல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரமும் ஜாதிப்பெயர் குறிப்பிடப்பட்டதை விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, “பெயரோடு ஜாதிப்பெயர் இருந்தால் அப்படித்தான் அழைக்கப்படுவார்கள். ஜெயராஜும் பெனிக்சும் அப்படித்தான் அழைக்கப்பட்டனர். மேலும், கிருஷ்ணசாமி நாயுடு, நேசமணி நாடார், பொன்னப்பா நாடார் என ஏற்கனவே காங்கிரஸ் முன்னணியினர் அழைக்கப்பட்டனர். ” என்று அவர் சுட்டிக்காட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார்.