சட்ட புத்தகத்திலிருந்து, ‘சோசலிஸ்ட்’, ’மதச்சார்பின்மை’ வார்த்தைகளை நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனு

அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’ ஆகிய இரு வார்தத்கைளை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் விஷ்னு சங்கர் ஜெயின் மூலம், வழக்கறிஞர்கள் பல்ராம் சிங், கருனேஷ் குமார் சுக்லா, தனிநபர் பிரவேஷ் குமார் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பவாது:
கடந்த 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் 42-வது திருத்தத்தின்படி அதில் சோசலிஸ்ட், மதச்சார்பின்மை ஆகிய இரு வார்த்தைகள் இணைக்கப்பட்டன. இது அரசியலமைப்பு கொள்கைகளுக்கும் இந்தியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார கருப்பொருளுக்கும் முரணானது.
அரசியலமைப்புச்சட்டம் 19(1)(ஏ)பிரில் இருக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், மற்றும் பிரிவு 25-ல் இருக்கும் மதச் சுதந்திரம் ஆகியவற்றின் உரிமைகளை மீறுவதாகும்.
மிகப்பெரிய குடியரசான பாரதத்தின் கலாச்சார, வரலாற்று கருப்பொருளுக்கு எதிரானதாக இந்தத் திருத்தம் இருக்கிறது. உலகின் பழைமையான நாகரீகத்தைக் கொண்டுள்ள நம்நாட்டில், மதம் குறித்த கருத்தாக்கத்திலிருந்து வேறுபட்டு தர்மம் குறித்த தெளிவான கருத்தாக்கம் இருக்கிறது. இந்தியச் சூழலுக்கு கம்யூனிச கோட்பாட்டை பயன்படுத்த முடியாது, பொருந்தாது. இது இந்தியாவின் மத உணர்வுகள் மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளுடன் ஒத்துப்போகவில்லை.
ஆதலால், 1976-ம் ஆண்டில் அரசியலமைப்புச்சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட சோசலிஸ்ட், மதச்சார்பின்மை ஆகிய இரு வார்த்தைகளையும் நீக்க உத்தரவிட வேண்டும். இந்த வார்த்தைகள் குடிமக்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ, சமூக அமைப்புகளுக்கோ பொருந்தாது.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.