“அயோத்தியை போல காசி, மதுரா மசூதிகளையும் முஸ்லிம்கள் விட்டுத்தர வேண்டும்!” ABAP அமைப்பு கோரிக்கை!

அயோத்தியை போல காசி, மதுராவில் உள்ள மசூதிகளையும் முஸ்லிம்கள் விட்டுத்தர வேண்டும் என அகில பாரத அஹாடா பரிஷத் (அகில இந்திய சாதுக்கள் சபை) தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த விவகாரத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) மற்றும் விஷ்வ இந்து பரிஷத் ஆதரவளிக்கவும் அந்த சபை வலியுறுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் தான் ஸ்ரீராமர் பிறந்த இடம் என பல நூறு ஆண்டுகளாக இந்துக்களிடம் நம்பிக்கை நிலவியது. இது அம்மாநிலத்தின் மற்ற இருபுனிதத்தலங்களான காசி எனும் வாரணாசி மற்றும் மதுராவிலும் தொடர்கிறது. இதில் காசியின் விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு அதன் பாதியில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகக் கருதப்படு கிறது. இதேபோல, ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுராவிலும் ஷாயி ஈத்கா மசூதி எழுப்பப்பட்டது என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

இவ்விரு மசூதிகள் மீதும் அயோத்தியை போல தொடுக்கப்பட்ட வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் ஏற்கப்படவில்லை. இதற்கு அதன் மீது மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட ‘மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991’ காரணமானது. எனினும், இந்த சட்டத்தை ரத்துசெய்யக் கோரும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் 2019-ல் தொடுக்கப்பட்ட வழக்கு, ஏற்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இச்சூழலில் கடந்த வருடம் நவம்பர் 9-ல், அயோத்தி ராமர் கோயில் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. இதன்படி, அயோத்தியில் பாபர்மசூதி அமைந்திருந்த நிலம் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு ஈடாக வேறு இடத்தில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை அரசுஅளிக்கவும் உத்தரவிடப் பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் உபியின் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அலகாபாத்தில் அகில இந்திய சாதுக்கள் சபைகூடியது. 13 முக்கிய சாதுக்கள் சபையின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த அவசரக் கூட்டத்தில் மொத்தம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முக்கியமாக அயோத்தியை போல காசி, மதுராவிலும் உள்ள மசூதிகளை முஸ்லிம்கள் தாமாக முன்வந்து இந்துக்களுக்காக விட்டுத்தர வேண்டும் என்ற தீர்மானம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து அச்சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் மஹேந்திர கிரி கூறும்போது, ”எங்கள் காசி, மதுரா விடுதலை இயக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் நாட்டின் இதர பொது அமைப்புகளையும் வலியுறுத்த உள்ளோம். மசூதிகளை ஒப்படைக்கக் கோரும் பேச்சு வார்த்தைக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்காவிட்டால், எங்கள் சபையின் சார்பில் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துவோம்” என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x