ஓ.பி.சி., இட ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை எனவும், இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்து, மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் செயல்படுத்த வாய்ப்புள்ளதா? என பதில் தர, மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.