விஷம் கொடுக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மன் மருத்துவமனைக்கு மாற்றம்!

விஷம் கலந்த தேநீர் கொடுக்கப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சைபீரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவல்னி, அதிபுர் புடின் ஆட்சிக்கு எதிராக தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி மாஸ்கோவுக்கு செல்ல டாம்ஸ்க் விமான நிலையத்திற்கு வந்தவர், விமானத்தில் ஏறும் முன் அங்குள்ள கபே ஒன்றில் தேநீர் அருந்தும் படங்கள் சமூக ஊடகங்களில் கிடைக்கின்றன. அதன் பிறகு விமானத்தில் ஏறிய அவர் வலியால் துடித்துள்ளார். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு சைபீரியாவில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கோமா நிலைக்கு சென்றதால் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது தனிப்பட்ட மருத்துவர் அனஸ்டாசியா என்பவரும் அவரை காண அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெள்ளியன்றே அவரை ஜெர்மனிக்கு மாற்ற அவரது மனைவி யுலியா முயற்சித்தார். ஆனால் விமானத்தில் பயணிப்பதற்கு ஏற்ற நிலையில் அவர் உடல் இல்லை என அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பின்னர் சனியன்று அனுமதி தந்துள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த அமைதிக்கான சினிமா என்ற தொண்டு நிறுவனம் தங்களது செலவில் தனி விமானம் ஏற்பாடு செய்து அலெக்சி நவல்னியை பெர்லினுக்கு அழைத்து வந்தனர். சாரிட்டி மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் இருக்கும் அவர் உடல்நிலை கவலையளிப்பதாகவே கூறுகின்றனர். திங்கள் கிழமைக்கு முன்பாக அறிக்கை வெளியிட முடியாது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜெர்மனிக்கு வந்துவிட்டதால் அவரது உறவினர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். அவர் உடலிருந்து விஷத்தை முறிக்கும் அனைத்து பணிகளையும் மருத்துவமனை செய்யும் என நம்புவதாக கூறியுள்ளனர்.